பெரம்பூர்,
சென்னை புளியந்தோப்பு கே.பி.கார்டன் 10-வது பிளாக்கை சேர்ந்தவர் சரவணன்(வயது 25). இவர், சமையல் கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர்களை வீடுகளுக்கு வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். சரவணன், தனது தாயாருடன் வசித்து வந்தார்.
நேற்று மாலை சரவணன், தனது மோட்டார்சைக்கிளில் புளியந்தோப்பில் இருந்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அம்பேத்கர் கல்லூரி அருகே வந்தபோது அங்குள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார்.
லாரி சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது தண்ணீர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சரவணன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் தண்ணீர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து வைத்தனர்.
பின்னர் பலியான சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்ணீர் லாரியை பறிமுதல் செய்ததுடன், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.