ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பொன்னியின்செல்வன், ஏட்டு இளவரசன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணுகுடி கிழக்கு கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் சில வாலிபர்கள் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பாடவிட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடத்தில் இருந்தனர். இதனால் அங்கு சென்ற போலீசார் பொது அமைதிக்கு இடையூறை ஏற்படுத்திய ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு அந்த ஒலிபெருக்கியின் ஒரு முக்கிய உபகரணத்தை மட்டும் கைப்பற்றிக்கொண்டு புறப்பட்டனர். இதற்கு வாலிபர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசார் புறப்பட்டு சென்ற வாகனத்தை வழியில் சிலர் மறித்தனர்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இடையூறு செய்த அப்புறப்படுத்தியபடி பாப்பாநாடு போலீஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில் கண்ணுகுடிமேற்கு இரட்டை பாலம் அருகே நள்ளிரவில் வாலிபர்கள் சிலர் சாலையின் குறுக்கே தடையை ஏற்படுத்தி போலீசார் சென்ற வாகனத்தை வழிமறித்து உருட்டுக்கட்டையால் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பிற போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போலீசாரை மறித்த வாலிபர்களை விரட்டி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரெத்தினம் கண்ணுகுடி கிராமத்தை சேர்ந்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பிரசாத் (வயது30), பிரவீண்(22) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 26 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.