வாஷிங்டன்,
ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்தனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்குப்பதிவின் முடிவில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
71 வயதான ராம்நாத் கோவிந்த் வருகிற 25-ந் தேதி இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவும் ராம்நாத்கோவிந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹேதர் நயூர் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் ராம்நாத்கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவருடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்தார்