வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் மத்தியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலை, ரெயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று (டிசம்பர் 7) முதல் 12 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 11,12-ஆகிய தேதிகளில் கடலூ தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (டிசம்பர் 7,8) மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com