தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 13 May 2025 12:00 PM IST (Updated: 13 May 2025 12:03 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுவாக தென்மேற்கு பருவ மழை மே 20ம் தேதி வாக்கில், அந்தமான் கடல் பகுதியில் துவங்கும். இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் ஜூன் 1ல் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் தெற்கு வங்கக்கடல் அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கலாம்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

மேலும் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலுார், தர்மபுரி, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய இடங்களில் 100 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதாவது 38 முதல் 39 டிகிரி செல்ஷியஸ் வரையும் வெப்பம் பதிவானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story