தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு
x

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து சென்றது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்றது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்கிறது என்றும் இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ந்தேதி வரை மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதனையொட்டி, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்படுகிறது என இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள மற்றொரு செய்தியில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது. பொதுவாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில், 8 நாட்களுக்கு முன்பாக மே 24-ந்தேதியே (இன்று) கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும், வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் இயல்பைவிட 92 சதவீதம் அதிக அளவு மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 7 இடங்களில் கன மழை பெய்துள்ளது, வங்கக் கடலில் மே 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது. அரபிக் கடலில் நிலைக் கொண்டுள்ள தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும். 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது

கோவை மற்றும் நீலகிரிக்கு நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று (24-05-2025) துவங்கி உள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது.

நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (24-05-2025) 5.30 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

24-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

25-05-2025 மற்றும் 26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (24-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (25-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் கா காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

24-05-2025 முதல் 28-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

24-05-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25-05-2025 மற்றும் 26-05-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27-05-2025 மற்றும் 28-05-2025: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

24-05-2025 மற்றும் 25-05-2025: தெற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-05-2025 முதல் 28-05-2025 வரை: தெற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல், கொங்கன்- கோவா கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story