வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பகுதியில் ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சியின் போது வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளை ராணுவ வீரர்கள் விட்டுச் செல்வார்கள். இப்படி விட்டுச் செல்லும் குண்டுகளை எடுத்து பொதுமக்கள் பழைய இரும்பு கடைகளில் விற்று விடுவார்கள். இதேபோல கடந்த 29-ந் தேதி மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்கப்பட்ட ஒரு குண்டு வெடித்ததில் மாரியப்பன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வீரமலைப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த 8-ந் தேதி வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினரும், வையம்பட்டி போலீசாரும் வீரமலைப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது 26 வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக வீரமலைப்பகுதி முழுவதும் வனத்துறை ஊழியர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையின் மேல் பகுதியில் பெரிய அளவிலான குண்டு இருப்பதும், மலை அடிவாரத்தில் 3 குண்டுகள் இருப்பதை கண்டறிந்த அவர்கள், இதுகுறித்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நேற்று காலை வனத்துறை ஊழியர்களும், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன் (பொறுப்பு) தலைமையிலான போலீசாரும், திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அச்சுதன் தலைமையிலான குழுவினரும் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது மலையின் மேல் பகுதியில் சுமார் 15 கிலோ எடையுள்ள குண்டு இருந்தது. அந்த குண்டு வெடிக்காமல் இருந்ததோடு மிகவும் பழையதாக இருந்தது.
இருப்பினும் குண்டு வெடிக்காமல் இருந்ததால் அதை எச்சரிக்கையாக எடுத்துச்செல்ல வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினர் முடிவு செய்து அதன்படி குண்டை ஒரு துண்டில் கட்டி தோளில் சுமந்தபடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனத்துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் மாறி, மாறி தூக்கி வந்தனர். இதேபோல் மற்றொரு இடத்தில் 3 குண்டுகளும் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதே போல் வீரமலை அடிவாரத்தில் மேலும் சில குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.