பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி நிறுவனங்கள், பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு தற்போதும் நடைமுறையில் இருக்கிறது.

இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து, ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தை சார்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

அவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் உருவான கருத்துகளை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் கருத்துகளை கொண்டு கல்வி நிறுவனங்களை சரியான நேரத்தில் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com