சென்னை போரூர் அருகே சோகம் பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற கணவரும் பலி

போரூர் அருகே, பெண் தீக்குளித்து இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உடல் கருகி பலியானார்.
சென்னை போரூர் அருகே சோகம் பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா (48). இவர்களுக்கு சரவணன் (25), விஜய் (23) என 2 மகன்கள் உள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கணவன்மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சித்ரா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜி, மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது.

உடல் முழுவதும் தீ பரவியதால் இருவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரது உடலிலும் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ராஜி, சித்ரா இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன்மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com