மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்க முடியாது, போராட்டம் தொடரும் - விவசாய அமைப்பு

மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டம் தொடரும் எனவும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாகவந்த உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டை வீசியதாலும் டெல்லி-உ.பி.எல்லை போர்க்களமானது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகள் தரப்பிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளின் 9 கோரிக்கையில் 7 கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்குடனும் ராஜ்நாத் சிங் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டம் தொடரும் எனவும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தரப்பு செய்தித் தொடர்பாளர் யுதுவீர் சிங் பேசுகையில், நாங்கள் 11 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையை மேற்கொண்டோம். 7 கோரிக்கைகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆனால் 4 கோரிக்கையின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது நிதி தொடர்பான விவகாரம் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டியது உள்ளது என்று கூறுகிறார்கள். விளைப்பொருட்களுக்கான நியாயமான விலை விவகாரத்தில் அவர்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லை. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியற்று உள்ளனர். மேலும் மற்றொரு முக்கியமான விஷயமான கடன் தள்ளுபடியிலும் அவர்களுடைய நிலை தெளிவாக தெரியவிலை. இதுதொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது, என்றார்.

விவசாய அமைப்பின் தலைவர் நரேஷ் திகாய்த் பேசுகையில், விவசாயிகள் மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்கமாட்டார்கள், போராட்டம் தொடரும், என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com