பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 116 பேர் பலியாகி இருந்தனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் பலியாகினர். இதனால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.
கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.






