பாகிஸ்தானில் நிலநடுக்கம்; வாய்ப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானில் கைதிகள் தப்பியோடியதன் தொடர்ச்சியாக சிறை துறையின் உயரதிகாரிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்; வாய்ப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு உட்பட்ட கராச்சி நகரில் மாலிர் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 100 இந்திய கைதிகளும் அடங்குவர்.

இந்நிலையில், சிறையில் 3 முறை குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கைதிகளை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது, சிறையில் வன்முறையும் ஏற்பட்டது. அவர்களில் பலர் இதனை பயன்படுத்தி, சிறை கதவுகளை உடைத்து கொண்டு வெளியே வந்தனர்.

இதில், வன்முறை ஏற்பட்டது. அப்படி வெளியே வந்த கைதிகளில் 216 பேர் சிறையை விட்டு தப்பி ஓடினர். இந்த வன்முறையின்போது, போலீசார் மற்றும் கைதிகள் சிலர் காயமடைந்தனர். கைதி ஒருவர் தப்பியோட முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டார். எனினும், 24 மணிநேரத்தில் தப்பியோடிய கைதிகளில் 78 பேரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். தலைமறைவான 135 கைதிகளில் பலர் கொடூர குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இதனால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி சிந்து உள்துறை மந்திரி ஜியா-உல் ஹசன் லஞ்சார் கூறும்போது, சிறை கைதிகள் தன்னிச்சையாக திரும்பி வந்தால், அவர்களுடைய தண்டனையை குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்றார்.

போலீசார் அவர்களை பிடித்து, கைது செய்தால் பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக சிறை துறையின் உயரதிகாரிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com