

கொழும்பு,
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து இலங்கை பண்டார நாயக்கா விமான நிலையம் திரும்பிய 22 புத்த பிட்சுகளிடம் 110 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி அவர்களிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கொண்டு வந்த சூட்கேசின் அடிப்பகுதியில் மறைத்து ஒவ்வொரு புத்த பிட்சுவும் 5 கிலோவுக்கும் அதிகமான அளவில் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உளவுத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று இரவு நடத்திய சோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் என்றும், அங்கு துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் புத்த துறவிகள் என கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.