ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி
Published on

பாக்தாத்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்க விமானப்படை போர் விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப ஏதுவாக அமெரிக்க ராணுவ விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் கேசி - 135 ரக ராணுவ விமானம் நேற்று ஈரானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டது.

ஈராக் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க ராணுவ விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ விமானத்தில் பயணித்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

அதேவேளை, அமெரிக்க ராணுவ விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமிக் ரிசிஸ்டன்ஸ் இன் ஈராக் என்ற பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com