பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்து 54 மணிநேரம் போராடிய பெண்ணின் பகீர் அனுபவம்

கிணற்றில் இருந்த கொசுக்கள், தண்ணீர் பாம்புகள் அவரை சுற்றி சுற்றி வந்தன.
பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்து 54 மணிநேரம் போராடிய பெண்ணின் பகீர் அனுபவம்
Published on

பீஜிங்,

சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் காட்டு பகுதி வழியே நடந்து சென்றார். அப்போது, அடர்ந்த வன பகுதியில் இருந்த பெரிய கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியும்.

அதனால், நீந்தி கிணற்றின் சுவர் ஒன்றை பிடித்து கொண்டார். ஆனால், அவரால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.

54 மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் அவரை அவசரகால மீட்பு குழுவினர் கண்டறிந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மிக சோர்வாக காணப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் கூறும்போது, கொசுக்கள், தண்ணீர் பாம்புகள் சுற்றி சுற்றி வந்தன. கிணற்றின் சுவரில் பதிந்திருந்த கல் ஒன்றை கெட்டியாக பிடித்து கொண்டேன். கிணற்றின் அடியில் கருப்பாக இருந்தது. சில தண்ணீர் பாம்புகள் நீந்தியபடி இருந்தன.

அதில் ஒன்று கையை கடித்து விட்டது என்றார். எனினும், அது விஷமற்ற பாம்பு. அதனால், அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றார். பல முறை பிடியை விட்டு விடலாம் என நினைத்த அவருக்கு, 70 வயது தாய், 80 வயது தந்தை மற்றும் கல்லூரி செல்லும் மகள் நினைவுக்கு வந்துள்ளனர்.

அவர்களை விட்டு சென்றால், அவர்கள் எப்படி பிழைப்பார்கள்? என நினைத்து உறுதியாக இருந்திருக்கிறார். சிகிச்சைக்கு பின்னர் அவருடைய உடல்நலம் தேறி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com