பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து: 6 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு, 3 பேர் மாயம்

பாகிஸ்தானில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில், சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சுற்றுலாத் தலமான அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள சைபுல்லா ஏரியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஏரியில் படகு பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆறு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன மேலும் 3 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

கைபர் பக்துன்க்வா முதல்-அமைச்சர் சோஹைல் அப்ரிடி இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அலட்சியம் அல்லது முறைகேடு ஏதேனும் நடந்திருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com