பாகிஸ்தானில் கோதுமை கடும் தட்டுப்பாடு ...! ஒரு கிலோ மாவு ரூ.160

பாகிஸ்தானில்பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து சுருங்கி வருகிரது. காய்கறிகள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன.
பாகிஸ்தானில் கோதுமை கடும் தட்டுப்பாடு ...! ஒரு கிலோ மாவு ரூ.160
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது. 57 சதவீதம் தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து சுருங்கி வருகிரது. காய்கறிகள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன.

கடந்த ஆண்டை விட வாராந்திர உணவுப் பணவீக்கம் ஏறக்குறைய 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சென்சிட்டிவ் விலைக் குறியீடு (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. ஜனவரி 5, 2023 அன்று முடிவடைந்த வாரத்திற்கான விலைக் குறியீடு, கோழியின் விலையில் 82.5 சதவீத உயர்வையும், முட்டையின் விலை 50 சதவீத உயர்வையும் பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானின் அத்தியாவசிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் அண்டை நாடு கோதுமை பற்றாக்குறைக்கு மத்தியில் அதன் மிக மோசமான கோதுமை மாவு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானில் உள்ள மக்களின் முக்கிய உணவின் முக்கிய அங்கமான கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளது. கராச்சியில், மாவு கிலோ 140/கிலோ-160/கிலோ விற்கப்படுகிறது. இதனிடையே இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை ரூ.1500க்கும், 20 கிலோ மூட்டை ரூ.2800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பஞ்சாப் மாகாணத்தில், மில் உரிமையாளர்களால் மாவு விலை கிலோ ரூ.160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்க்வாவில், விலையை அரசு கட்டுப்படுத்தத் தவறியதால், 20 கிலோ மாவு மூட்டை ரூ.3100க்கு விற்கப்படுகிறது.

நெருக்கடி காரணமாக கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கோதுமை மாவு வாங்க பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோதுமை மாவுக்கு (அட்டா) கடும் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது.இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது.மாவுத் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதால், குறைந்த விலையில் மாவு வாங்க முயன்ற 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கோதுமை மாவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோதுமை ரொட்டி பேக்கரி கடைகளில் உள்ல பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்து உள்லது.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் பிரதான நானின் விலை ரூ.30 ஆகவும், ரொட்டியின் விலை ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக உள்ளூர் கடைக்காரர்கள் உறுதி செய்துள்ளனர்.

மாவின் விலை அதிகரிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை போன்ற காரணங்களால் தாம் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

"நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நடுத்தர வர்க்கம் வாங்குபவர்களுக்கும் கூட உணவுப் பொருட்களின் விலைகள் மிகக் கொடூரமாக உயர்ந்துள்ளன. ஏழை மக்கள் அதிக கட்டணம் செலுத்த முடியாது, "என்று இஸ்லாமாபாத்தில் வசிக்கும் அம்ஜத் ஹுசைன் என்பவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com