காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு

காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டெல் அவிவ்,

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் அறிவித்து தாக்குதல் நடத்துகிறது. ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில் 56 ஆயிரம் இறந்தனர்.

ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும்வரையில் போர் ஓயாது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். இதனால் வரும் நாட்களில் போர் முழுமையாக முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்தியது. காசா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்த நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், மசூதிகள் ஆகியவை இடிந்து நொறுங்கின. இந்த கொடூர தாக்குதலில் இளம்பெண்கள், சிறுமிகள் உள்பட 62 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 422 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களின் வருகையை சமாளிக்க போராடி வருகின்றன, அதே நேரத்தில் பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com