49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய தொடர் கொலையாளி: சிறையில் அடித்துக்கொலை

கனடாவை உலுக்கிய தொடர் கொலையாளி சிறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒட்டாவா,

கனடாவின் வான்கூவர் நகரில் கடந்த 1990-2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் பலர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்திய ராபர்ட் பிக்டன் (வயது 71) சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசுக்கு புகார்கள் சென்றன.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்றபோது அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 49 பெண்களை அவர் வெட்டிக்கொன்றதும், பின்னர் அவர்களது உடலை துண்டு, துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் ராபர்ட்டுக்கும், சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடந்த மாதம் 19-ந் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் பலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com