

பீஜிங்,
கான்சு மாகாணத்தில் லான்ஜவ் நகரில் உள்ள சுங்க சாவடியில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 7.40 மணிக்கு சுங்க கட்டணம் செலுத்தி விட்டு கடந்து செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு நின்று கொண்டிருந்த கார்கள் மீது அந்த லாரி மோதியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு லாரியை வேகமாக ஓட்டி வந்தபோது பிரேக் திடீரென செயலிழந்து போய் விபத்து நேரிட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.