கொரோனா தடுப்பூசி போடுவதை 26 சதவீதம்பேர் விரும்பவில்லை - உலக அளவில் நடந்த கருத்துக்கணிப்பில் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உலக அளவில் நான்கில் ஒருவர் விரும்பவில்லை என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதை 26 சதவீதம்பேர் விரும்பவில்லை - உலக அளவில் நடந்த கருத்துக்கணிப்பில் தகவல்
Published on

ஜெனீவா,

ஜெனீவாவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதார கூட்டமைப்பும், இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசி குறித்து, உலக அளவில் கடந்த ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதிவரை ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின

அமெரிக்கா, இத்தாலி உள்பட 27 நாடுகளில் மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 74 சதவீதம்பேர், தங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தால் போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதன் செயல்திறன் எப்படி இருக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை, 13 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இப்படி கூறினர்.

பாதிக்கும் மேற்பட்டோர் (59 சதவீதம்) இந்த ஆண்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது என்று தெரிவித்தனர். ஆனால், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமானோர் இந்த ஆண்டே தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டனர்.

தடுப்பூசியின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடையே அதிகரிக்க அரசு-தனியார்-ஆராய்ச்சியாளர்கள்-உற்பத்தியாளர்கள் இடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பை சேர்ந்த அர்னாட் பெர்னார்ட் கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com