

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயேதுல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலி காமெனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் உள்ள புனித நகரமான மஷ்ஹாதில் நடைபெறுகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி காமேனி ( வயது 86), கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தெஹ்ரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த 36 ஆண்டுகளாக உச்ச தலைவராக பதவி வகித்து வந்த கமேனி கொல்லப்பட்டதால் கடும் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த போரினால் மூன்று மாதங்களுக்கும் மேலாக வளைகுடாவில் பதற்றம் நிலவியது. தற்போது அங்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அயேதுல்லா அலி கமேனி இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஜூலை 7ஆம் தேதி தெஹ்ரானின் தெற்கே அமைந்துள்ள மற்றொரு புனித நகரமான கோமிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.கடந்த பிப்ரவரியில் காமெனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதிலிருந்து அவரது இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன. முதலில் ஜூன் மாத இறுதியில் நல்லடக்கம் செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஜூலை மாதத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.