சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி: 10 லட்சம் பேர் வெளியேற்றம்; ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து

சீனாவை தாக்கிய பவி சூறாவளியை விட 40 மடங்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது.
சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி:  10 லட்சம் பேர் வெளியேற்றம்; ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து
Published on

ஷாங்காய்

சீனாவை தாக்கிய டால்பின் சூறாவளியால் ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சூறாவளி

ஜப்பானில், கடந்த ஜூலை 26-ந்தேதி பருவகால காற்றழுத்தம் ஒன்று உருவாகி, பின்னர் ஜூலை 28-ந்தேதி அது வலுவான சூறாவளியாக உருவானது. அதற்கு டால்பின் சூறாவளி என பெயரிடப்பட்டது. இந்த டால்பின் சூறாவளி, ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான ஒகினவாவை கடுமையாக தாக்கியது. இதனால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால், அதில் வசித்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூறாவளி புயலால், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒகினவா தீவு, ஆமமி தீவு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சூறாவளியால் அதிகம் தாக்கப்பட கூடிய துறைமுகங்கள் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்களும் பாதுகாப்பை முன்னிட்டு மூடப்பட்டன.

பலத்த காற்று

சூறாவளியின்போது, பலத்த காற்று வீசியதில், வயது முதிர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால், மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது.

எனினும், சில சமயங்களில் மணிக்கு 216 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூறாவளி, சீனாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஜப்பானை தாக்கி விட்டு நகர்ந்து சென்ற டால்பின் சூறாவளி சீனாவை நெருங்கியது. அந்நாட்டின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள கடற்கரையில் இன்று மாலை சூறாவளி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

10 லட்சம் பேர்

இதன்படி, யூஹுவான், வென்லிங் நகரங்களில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஷாங்காய் நகரில் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. சூறாவளியை முன்னிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், மொத்தம் 2,230 விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், நாளை (திங்கட்கிழமை) 720-க்கும் மேற்பட்ட விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஹாங்சவ் ஜியாவ்ஷான் சர்வதேச விமான நிலையம், 500-க்கும் மேற்பட்ட விமானங்களை இன்று தரையில் நிறுத்தி வைத்தது.

44 விமான நிலையங்கள்

நாளைக்கான 180-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஜெஜியாங் மாகாணத்தில் நிங்போ லிஷே மற்றும் வென்ஜவ் லாங்வான் விமான நிலையங்களில் இன்று எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இன்று முதல் புதன்கிழமை வரை 44 விமான நிலையங்கள் சூறாவளியால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்ஜிங், ஹெபய் மற்றும் ஊகான் நகரங்களிலும் விமான சேவை நாளை முதல் பாதிக்கப்படும்.

இதேபோன்று, ஷாங்காய் நகரில் ரெயில் சேவையும் பாதிப்படைந்து உள்ளது. நடப்பு ஆண்டில் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது இருக்கும். இதனால், நீண்டநேர மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த மாதம் சீனாவை தாக்கிய பவி சூறாவளியை விட 40 மடங்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com