ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ஜம்மு-காஷ்மீர், டெல்லியிலும் நில அதிர்வு

வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
காபூல்,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. .இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2,205 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படையினர் சென்றடைய மிகவும் கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை, மலைக் கிராமங்களில் வசித்த மக்களின் நிலைக்குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தெற்கு ஆப்கானிஸ்தானில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 10.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், டெல்லியின் சுற்றுப்பகுதிகள் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






