பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிப்பு

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியை தழுவி தனது பிரதமர் பதவியை இழந்தார். இதனையடுத்து ஷபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

இந்த நிலையில் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com