

ஒட்டாவா,
கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் ‘சீட் பெல்ட்’ அணிய மறுத்த சுட்டிக்குழந்தையால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கார்ட்டர் ஏர்லைன்ஸ் விமானம் டொராண்டோ நோக்கி புறப்பட தயாரானது. அப்போது ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில் அமரவும், சீட் பெல்ட் அணியவும் அடம் பிடித்து பிடிவாதமாக மறுத்தது. குழந்தையின் பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் எவ்வளவு முயன்றும் அக்குழந்தையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பு காரணங்களால் விமானம் மீண்டும் முனையத்திற்கே திருப்பப்பட்டது.
அக்குழந்தையையும், பெற்றோரையும் அவர்களின் உடைமைகளுடன் கீழே இறக்குவதற்குள் நள்ளிரவு 12.30 மணி ஆகிவிட்டது. அதற்கு மேல் அந்த விமான நிலையத்தின் ஓடுதளம் மூடப்பட்டுவிடும் என்பதால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற பயணிகள் அனைவரும் மறுநாள் விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்திற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.