74 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக... தைவான் முன்னாள் அதிபர் சீன சுற்றுப்பயணம்

சீனாவில், தைவானின் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
74 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக... தைவான் முன்னாள் அதிபர் சீன சுற்றுப்பயணம்
Published on

தைபே,

தைவானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் மா யிங்-ஜீயவ். அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். இதனை அவரது அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

அவருடன் தைவான் மாணவர்கள் குழு ஒன்றும் பயணிக்கிறது. அவர்கள், பல்வேறு நகரங்களை சேர்ந்த சீன மாணவர்களை சந்தித்து உரையாட உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

தைவானின் குவோமின்டாங் என்ற எதிர்க்கட்சியின் முக்கிய நபரான மா யிங்-ஜீயவ், வருகிற 27-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ந்தேதி வரை சீன பயணம் மேற்கொள்கிறார்.

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும் தருணத்தில், அவரது இந்த பயணம் அமைகின்றது. சீனாவின் உள்நாட்டு போர் 1949-ம் ஆண்டு முடிந்தது. அதற்கு பின்னர் அந்நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் தைவான் தலைவர் மா யிங்-ஜீயவ் ஆவார். இதனால், அவரது பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

அவரது இந்த பயணம் தனிப்பட்ட முறையிலானது என கூறப்படுகிறது. சீனாவின் தென்மேற்கே ஹுனான் மாகாணத்தில் அவரது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மா யிங்-ஜீயவ் பயணம் செய்ய இருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

ஜனநாயக அமைப்பு ரீதியிலான சுயாட்சி முறையில் தைவான், அரசாட்சி செய்து வருகிறது. எனினும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அதனை தனது நாட்டுடன் ஒருங்கிணைந்த பகுதி என தொடர்ந்து கூறி வருவதுடன், தைவானை கட்டாயப்படுத்தி தன்னுடன் இணைக்க முயற்சிக்கிறது என கூறப்படுகிறது.

இதனை சீனாவும் மறுக்கவில்லை. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தைவான் ஜலசந்தி பகுதியில் போர் ஏற்பட கூடிய பதற்ற சூழலும் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com