

இஸ்லமபாத்,
ஜமாத் அத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத், மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். அவர் தற்போது பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு துணை போவதாகவும், தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை வலியுறுத்தின. உலக நாடுகளின் தொடர்வற்புறுத்தலுக்கு பணிந்த பாகிஸ்தான், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சையத்தை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
இந்த நிலையில், ஹபீஸ் சையத்தை கொல்ல வெளிநாட்டு உளவு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசுக்கு கடிதம் எழுதியுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், ஹபீஸ் சையத்தை கொலை செய்ய வெளிநாட்டு உளவு அமைப்புகள் 80 மில்லியன் ரூபாய் அளவுக்கு, இரண்டு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வழங்கியிருப்பதாகவும், இதனால், ஹபீஸ் சையத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.