பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு கண் பரிசோதனை

மருத்துவமனையில், டாக்டர்கள் இம்ரான் கானின் விழித்திரை நோய்க்கும் பார் வையைப் பாது காப்பதற்கும் சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு கண் பரிசோதனை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சர்வதேச அளவில் கடும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் இம்ரான் கானுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்ரான் கானின் பார்வை மோசமடைந்து வருவதால், அவரை ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் மாற்றியதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் 15 வாகனங்கள் கொண்ட கான்வாய் மூலம் சிக்னல் ஜாமர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில், டாக்டர்கள் இம்ரான் கானின் விழித்திரை நோய்க்கும் பார்வையை பாதுகாப்பதற்கும் சிறப்பு சிகிச்சை அளித்தனர். சாதாரண இருதய பரிசோதனைகளுக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் அல்-ஷிபா கண் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர்களால் இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கண் மருத்துவ செயல்முறை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com