எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

எரி பொருள் எடுத்து சென்ற சரக்கு ரெயிலில் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Freight train derails south of Chicago
Published on

சிகாகோ,

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் சிகாகோவில் இருந்து புரொப்பேன் என்ற எரி பொருளை எடுத்து கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. அந்த ரெயிலானது சிகாகோவில் இருந்து தெற்கே 56 கி.மீ தொலைவில் உள்ள மேட்சன் கிராமத்திற்கு அருகே சென்ற போது ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நடைபெற்றதால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்டிகளில் ஏதேனும் கசிவுகள் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். அப்போது, சிறிய கசிவு இருந்தது தெரியவந்தது. ஆனால் அது அபாயகரமான அளவீடுகளில் இல்லை என்பதால் மக்கள் வெளியேற்ற உத்தரவு விலக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்து தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரக்கு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com