பப்புவா நியூகினியா நாட்டில் பரபரப்பு: நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

‘அபெக்’ மாநாட்டு பணிக்காக அலவன்சு வழங்காததால் ஆத்திரமடைந்த பாதுகாப்பு படையினர், நாடாளுமன்றத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
பப்புவா நியூகினியா நாட்டில் பரபரப்பு: நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்
Published on

போர்ட் மோரஸ்பி,

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் அபெக் என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.

இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய அலவன்சினை (படி) அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்தனர்.

இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஆலன் பேர்டு என்ற எம்.பி. கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள் என கூறினார்.

இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com