காசா: 16 பேர், நிவாரண உதவி பொருட்களுடன் சென்ற கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்

காசா செல்லும்முன் மால்டாவில் 40 பேரை கப்பலில் ஏற்றி செல்வது என முடிவாகி இருந்தது.
காசா: 16 பேர், நிவாரண உதவி பொருட்களுடன் சென்ற கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்
Published on

காசா நகரம்,

காசா பகுதியில், ஓராண்டை கடந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிக்கான பொருட்களை வழங்குவதற்காக 16 பேருடன் கப்பல் ஒன்று சென்றுள்ளது. அதனை மனித உரிமைகள் குழுவினர் இயக்கினர்.

இந்நிலையில், மால்டா கடற்கரை பகுதியில் நேற்று அந்த கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் கப்பலில் தீ பிடித்து கொண்டது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கப்பல் நீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

உடனே கப்பலில் இருந்தவர்கள் சார்பில் அவசரகால அபாய அழைப்பு விடப்பட்டது. இதனை தொடர்ந்து, மற்றொரு கப்பல் விரைவாக வந்து, தீப்பிடித்த கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கப்பலின் தீயும் அணைக்கப்பட்டது. 16 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனை மால்டா அரசு தெரிவித்து உள்ளது.

எனினும் தாக்குதல் நடந்ததற்கான காரணம் பற்றி எதுவும் தெரிய வரவில்லை. கப்பலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த கப்பல், மத்திய தரைக்கடலில் சர்வதேச கடல்பரப்பில் உள்ளது.

துனிசியாவில் இருந்து இந்த வார தொடக்கத்தில் புறப்பட்ட கப்பலானது, இஸ்ரேலின் தடையை சவாலாக எடுத்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

காசா செல்லும்முன் மால்டாவில் 40 பேரை ஏற்றி செல்வது என முடிவாகி இருந்தது. அவர்களில் சுவீடன் நாட்டின் ஆர்வலர் கிரேட்டர் தன்பெர்க்கும் அடங்குவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com