ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தென்கொரியா முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு அறிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தென்கொரியா முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு
Published on

சியோல்,

தென்கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை. இவரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அதிபரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சாம்சங் உள்பட பெரும் நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்று ஊழலில் ஈடுபட்டார். இந்த ஊழலில் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு நேரடி பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு எதிராக நாட்டில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு நாடாளுமன்றம் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து அதிபர் பதவியை பறித்தது. அதனை தொடர்ந்து, பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்தது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் மூன் ஜே இன் வெற்றி பெற்று அதிபரானார்.

இந்தநிலையில் ஊழல் வழக்கில் சுமார் 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு அறிவித்துள்ளது.

கடந்த கால பிளவுகளை மறந்து, தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பார்க் கியுன் ஹை உள்பட 3,094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் வருகிற 31-ந்தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தென்கொரிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com