

வாஷிங்டன்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதனிடையே துறைமுக நகரான மரியுபோலில் பிரசவ ஆஸ்பத்திரி மீது ரஷியா நடத்திய வான்தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். பிரசவ நேரத்துக்காக காத்திருந்த கர்ப்பிணிகளும், டாக்டர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
தலைநகர் கீவுக்கு மேற்கே உள்ள 2 நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. தலைநகர் கீவின் மேற்கே 2.60 லட்சம் மக்கள் வசிக்கிற ஜைட்டோமர் நகரில் 2 ஆஸ்பத்திரிகள் மீது குண்டுகள் விழுந்தன. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் (Goldman Sachs Group In) மற்றும் ஜேபிமோர்க சேஸ் (JPMorgan Chase & Co) ஆகியவை ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.