

காசா முனை
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் புலம்பெயர்ந்து வேறிடங்களுக்கு தப்பி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு தலைவரான இஜ் அல்-தின் அல்-ஹத்தத் என்பவர் கடந்த 16-ந்தேதி, காசா நகரில் நடந்த வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
முகமது சின்வார் கொல்லப்பட்டதும், அந்த பதவியை ஹதத் ஏற்று கொண்டு, ஹமாஸ் அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்ததுடன், இஸ்ரேல் மக்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டார் என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், காசா முனையின் வடக்கு பகுதியில் இருந்த ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவின் தலைவரான முகமது ஒடே என்பவரை இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வெளி தாக்குதலில் படுகொலை செய்துள்ளது. எனினும், ஹமாஸ் அமைப்பு இதனை உறுதி செய்யவில்லை.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் நுண்ணறிவு பிரிவு தலைவரான ஒடே, இஜ் அல்-தின் அல்-ஹதத் படுகொலைக்கு பின்னர், அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ஒடேவை இஸ்ரேல் படைகள் இலக்காக கொண்டுள்ளன என்று இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி கத்சு மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரும் நேற்று கூறினர். இதற்காக பல மாதங்களாக அவரை கண்காணித்து வந்தும், அவருடைய நகர்வுகளை பற்றியும் அறிந்து வந்தனர் என்றும் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த சூழலில், காசா முனை பகுதியில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஒடே கொல்லப்பட்டு உள்ளார்.