"இந்தியா தாக்குதல் நடத்தினால்.." - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
"இந்தியா தாக்குதல் நடத்தினால்.." - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதன்படி ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி உள்ளது. இந்த நிலையில், சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால், அதனை போராகவே கருதப்படும் என்றும் சிந்து நதிநீரை நிறுத்தினால் எங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்துத் துறைகளிலும் உறுதியான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தானில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது, தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com