

லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரை பார்க்க குடும்ப உறுப்பினர்களுக்கு சிறையில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தன் தந்தையின் உயிரை காப்பாற்றுமாறு சர்வதேச நாடுகளுக்கு இம்ரான்கான் மகன் காசிம் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1,100 நாளாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை, கண்பார்வை மோசமடைந்து வருகிறது.அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. ஆனால், மருத்துவ உதவியை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. இம்ரான்கானின் உயிரை காப்பாற்ற அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காசிம் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.