'அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா' - பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
'அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா' - பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை
Published on

இஸ்லாமாபாத்,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன.

இந்த சூழலில், அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது.

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை குழுக்கள் மூலம் நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால் இந்தியா விசாரணையைத் தவிர்த்து மோதல் பாதையை தேர்ந்தெடுத்தது.

இந்தியாவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உறுதியாகவும், தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளின் பொறுப்பு இந்தியாவையே சேரும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com