பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு தடை- இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு தடை- இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு
Published on

பெய்ஜிங்,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், சீன செயலிகளுக்கு எதிரான இந்தியாவின் தடை, சீனாவின் முதலீட்டாளர்களுக்கும் சேவை வழங்குபவர்களின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது. இந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com