

காத்மாண்டு,
நேபாளம் வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல் `பச்சை வீட்டின்' உரிமையாளர் லஷ்மி பாண்டே வெள்ளம் வந்த போது எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம் என கூறினார்.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1004 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4,000 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் சிக்கிய 11,000 பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளில் நேபாளம், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாள வெள்ளத்தில் உடையாமல் நின்ற வைரல் `பச்சை வீட்டின்' உரிமையாளர் லஷ்மி பாண்டே கூறியதாவது:-
வெள்ளம் வந்த போது எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் 6 பேர் இருந்தோம். பக்கத்து வீடு இடிந்து விழுந்த போது ரொம்பவே பயந்துவிட்டோம். எங்கள் வீடு மட்டும் இடிந்து விழாதது கடவுளின் செயல்தான். ஆனால், அதற்கு முன்பே 4-5 பேர் சேர்ந்து தங்கள் உயிரை பணையம் வைத்து எங்களை மீட்டு விட்டனர். நாங்கள் இப்போது மறுபிறவி எடுத்துள்ளதாக நினைக்கிறோம். இறைவன் எங்களுக்கு ஒரு செகண்ட் சான்ஸ் கொடுத்து இருக்கிறார்.
"வெள்ளம் வந்த போது நானும் என் கணவரும் பக்கத்தில் உள்ள எங்களின் கடையில் இருந்தோம். வெள்ளம் அதிகமான போது என் மாமியாரையும் குழந்தைகளையும் காப்பாற்றத்தான் வீட்டுக்கு ஓடி வந்தோம். `கீழே வாருங்கள்’ என்று நான் கத்தியது மாமியாருக்கு கேட்கவில்லை. அதனால்தான் நாங்கள் மேலே போனோம். வெள்ளம் நம்மை அடித்து செல்லப் போகிறது என்று நான் சொன்ன போது என் மாமியார் அப்படியெல்லாம் நடக்காது என்றார். அதே போல் நாங்கள் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல்தான்" என்று கூறியுள்ளார்.