

டெல் அவிவ்,
லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு. இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது. அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது.
ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீனிய மண்ணில் இந்த புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் நம்பி பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்பின் அறிக்கைக்கு இஸ்ரேல் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்த பேச்சைக் கண்டித்த இஸ்ரேல், அமைதிக்காக மத்தியஸ்தம் செய்வதாக கூறும் ஒரு நாடு, யூதர்களின் அழிவுக்கு அழைப்பு விடுக்கிறது, இத்தகைய பயங்கரவாதிகளிடம் இருந்து எங்களைத் தற்காத்துக் கொள்வோம் என்று சூளுரைத்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் தனது எக்ஸ் வலைதளத்தில், “சமாதானத்திற்கு மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்து வரும் இந்த அப்பட்டமான யூத-விரோத ரத்த அவதூறுகளை இஸ்ரேல் மிகவும் கடுமையாக கருதுகிறது. யூத அரசை 'புற்றுநோய்' என்று அழைப்பது, அதன் அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்கு சமம். இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.