

டோக்கியோ
தாயால் கைவிடப்பட்டு, பொம்மையைத் தாயாக நினைத்து வளர்ந்த ‘பஞ்ச் குன்’ என்ற மக்காக் குட்டி குரங்கின் முதல் பிறந்தநாளை, ஜப்பான் மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஜப்பான் நாட்டின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் கடந்த 2025 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பஞ்ச் குன் பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே அதன் தாய் அதை வளர்க்க மறுத்துக் கைவிட்டது. இதனால் கடுமையான ஏக்கத்தில் தவித்த அந்த குட்டி குரங்குக்கு, பூங்கா ஊழியர்கள் ஒரு ஆரஞ்சு நிற உராங்குட்டான் பொம்மையைக் கொடுத்தனர்.
அதைத் தனது தாயாகவே பாவித்த பஞ்ச் குன், எப்போதும் அந்தப் பொம்மையைக் கட்டியணைத்தபடியே வாழத் தொடங்கியது. இணையத்தில் வெளியான இந்த உருக்கமான காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உருக வைத்தது.
அந்த உராங்குட்டான் குட்டிக்கு இன்று ஒரு வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பூங்காவிற்கு நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நேரில் வர முடியாத சர்வதேச ரசிகர்கள் தங்களின் வாழ்த்து அட்டைகளையும், விதவிதமான பரிசுகளையும் பூங்காவிற்கு அனுப்பி தங்களின் அன்பைப் பொழிந்தனர். மேலும், பூங்கா நிர்வாகம் சார்பில் அதற்குப் பிடித்தமான சிறப்பு உணவுகளும், பழ கேக்குகளும் வழங்கப்பட்டன.
ஆரம்பத்தில் மற்ற குரங்குகளால் ஒதுக்கப்பட்ட பஞ்ச் குன், தற்போது சக குரங்குகளின் கூட்டத்துடன் மெல்ல மெல்ல இணைந்து வாழப் பழகி வருகிறது. பொம்மையின் துணையோடு வளர்ந்த ஒரு குட்டி குரங்குக்கு, உலகம் முழுவதிலுமிருந்து மனிதர்கள் காட்டிய இந்த பேராதரவு தற்பொழுது இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.