ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; கடலில் கலந்த நெருப்புக் குழம்பு

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; கடலில் கலந்த நெருப்புக் குழம்பு
Published on

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த 19 ஆம் தேதி, ரிக்டர் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.

இந்த எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை வானத்தில் பரவியது. இதன் பின்னர் அந்த எரிமலையில் இருந்து தொடர்ச்சியாக நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 2-வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது.

எரிமலை வெடிப்பிற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை 500-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு, அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி செல்லும் நிலையில், எரிமலைக் குழம்பு கடலில் கலக்கும் போது ஆபத்தான வாயுக்கள் வெளியாகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு, நேற்று மாலை அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது. கேனரி தீவுகள் அமையப்பெற்றுள்ள டிஜாரபே எனப்படும் கடல் பகுதியில் நெருப்புக் குழம்பு கடலில் கலந்தது. அப்போது எழும்பிய புகை மூட்டம் வானில் நீண்ட தூரம் வரை பரவியது. இதனால் ஆபத்தான வாயுக்கள் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com