பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இதற்கிடையே ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், சர்வதேச பயங்கரவாதியாகவும் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயலிழந்து உள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்புகளை பாகிஸ்தான் திறம்படவும் விரிவாகவும் அகற்றியுள்ளது. அதன் தலைவர்களை கைது செய்து வழக்கு தொடார்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஒரு செயலிழந்த அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை தொடர்புப்படுத்துவது அடிப்படை யதார்த்தங்களை பொய்யாக்குகிறது.
பாகிஸ்தான் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த சகிப்புத்தன்மையும் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச அளவில் ஒத்துழைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.






