‘செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்... முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது’ - நாசா

Image Courtesy : @NASAPersevere
செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, கடந்த 50 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பல்வேறு விண்கலங்களை அனுப்பி வருகிறது. கடந்த 1965-ம் ஆண்டு நாசா அனுப்பிய ‘மேரினர்-4’ விண்கலம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் சென்று புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. தொடர்ந்து 1976-ம் ஆண்டு ‘வைக்கிங்-1’ விண்கலத்தின் லேண்டர் கருவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் மணலின் நிற வேறுபாடுகளை துல்லியமாக அறிய உதவியது. செவ்வாய் கிரகத்தில் எரிமலை மண், மெல்லிய வளிமண்டலம் உள்ளது என்பது தெரியவந்தது. முக்கியமாக, அங்கு கடந்த காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. தண்ணீர் என்பது உயிர்களின் அடிப்படையாகும். எனவே, செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.
இதன் பிறகு செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தற்சமயம் செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற கிரகமாக உள்ளது. ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும், அந்த கிரகத்தின் மின்காந்தப்புலம் அழிந்துபோனதால், வளிமண்டலத்தின் அடர்த்தி குறைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மெல்லிய வளிமண்டலம்(பூமியை விட சுமார் 100 மடங்கு குறைவு) காரணமாக சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் உயிர் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகம் இன்று உயிர்கள் இல்லாத வெறுமையான கிரகமாக காட்சியளிக்கிறது. இருப்பினும் அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை நாசா அனுப்பியது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் ரோவர் கருவி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி, செவ்வாய் கிரகத்தில் 'ஜெசேரோ பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த 'ஜெசேரோ பள்ளத்தாக்கு' பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது. ஏற்கெனவே 'பெர்சவரன்ஸ்' ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை இந்த ரோவர் முதன் முறையாக படம் பிடித்து அனுப்பியது.
இந்த நிலையில், ‘பெர்சவரன்ஸ்' விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான முக்கியமான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சமீபத்தில் ‘பெர்சவரன்ஸ்' ரோவர் சில பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்த பாறையானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜெசேரோ பள்ளத்தாக்கில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் அடிப்பகுதியில் இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து நாசாவின் பொறுப்பு நிர்வாக தலைவர் ஷான் டப்பி கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் அனுப்பப்பட்ட ‘பெர்செவரன்ஸ்’விண்கலம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த பாறை மாதிரியில் உள்ள ரசாயன சேர்மங்களை ஆய்வு செய்ததில், இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான, புரட்சிகரமான ஆதாரமாம் என்பது உறுதி செய்யப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.






