

மகிழ்ச்சியான நாடுகள்:
பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் வெற்றியை தீர்மானிப்பது இல்லை. அங்கு வாழும் மக்களின் மனமகிழ்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ந்தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஐ.நா. சபை உலக மகிழ்ச்சி அறிக்கை 2026-ஐ வெளியிட்டு உள்ளது.
ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், உலகளாவிய வாக்கெடுப்பு தரவுகளை வழங்கும் 'கேலப்' என்ற நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. சமூக ஆதரவு, ஊழலற்ற நிர்வாகம், சுதந்திரம், தரமான வாழ்க்கை, இயற்கையுடன் இணக்கம் போன்ற பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு 147 நாடுகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
பின்லாந்து முதலிடம்; இந்தியா 116-வது இடம்:
அதன்படி, 2026-க்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது முறையாக பின்லாந்து நாடு முதலிடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்தபடியாக ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா, சுவீடன், நார்வே, நெதர்லாந்து, இஸ்ரேல், லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தானும், அதற்கு முந்தைய நாடுகளாக சியரா லியோன், மலாவி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய நாடுகளும் இருக்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில், இந்த பட்டியலில் 116-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு (2025) 118-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 2 இடம் முன்னேறியுள்ளது. அண்டை நாடுகளான நேபாளம் 99-வது இடத்திலும், பாகிஸ்தான் 104-வது இடத்திலும், வங்காளதேசம் 127-வது இடத்திலும், இலங்கை 134-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா பின்தங்க காரணம் என்ன?
இந்தியாவில் ஆபத்து காலங்களில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையே குறைவாக இருப்பதாகவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்து வந்தாலும், அந்த வருமானம் ஒரு சிலரிடமே குவிவதாகவும், பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு கிடைப்பதில் உள்ள சிரமம் ஒட்டுமொத்த மகிழ்ச்சி புள்ளிவிவரத்தை குறைப்பதாகவும், இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்காதது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவதாகவும், இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் அவர்களின் வாழ்க்கை திருப்தியை குறைப்பதாகவும் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியா பின்தங்கி இருப்பதற்கு காரணங்களாக அடுக்கப்படுகின்றன.