பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏசி வெடித்து பயங்கர தீ: 15 குழந்தைகள் உடல் கருகி பலி

பாகிஸ்தான் மருத்துவமனையில் ஏசி வெடித்து பயங்கர தீ: 15 குழந்தைகள் உடல் கருகி பலி
பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவமனையில் மகளிர் மருத்துவப் பிரிவில், குழந்தைகளுக்கான பராமரிப்பு அறை அமைந்துள்ளது. அங்கு காலை 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. அப்போது மருத்துவமனையின் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி இயந்திரத்தின் கம்ப்ரெசர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தீப்பிடித்து அறை முழுவதும் புகை சூழ்ந்தது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்த குழந்தைகள் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் இருந்த அறை, மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்ததால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஒரு பச்சிளம் குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். தீ முழுமையாக அணைக்கப்பட்டு, தொடர்ந்து குளிர்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com