

மெக்சிகோ
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவர்கள் பல்வேறு கும்பல்களாக பிரிந்து கடத்தல் தொழிலை பரவலாக செய்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி போட்டி ஏற்பட்டு கும்பல் மோதல்கள், வன்முறையும் நடைபெறுவது உண்டு.
இந்த கும்பல்களை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் அரசியல் தலைவர்களையும் இந்த கும்பல் சுட்டு கொலை செய்து விடுகிறது.
இந்த சூழலில், அந்நாட்டின் சக்தி வாய்ந்த ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவனாக நெமசியோ ஓஸ்குவெரா என்பவர் இருந்து வந்துள்ளார்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவரை, மெக்சிகோ ராணுவத்துடன் இணைந்து சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து சுட்டு படுகொலை செய்தனர்.
இதனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா நகரங்களில் வன்முறை பரவி உள்ளது. சாலை மறியல், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் மாகாணம் முழுவதும் காணப்படுகிறது. முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.