

கிவ்,
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று முன்தினம் ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது. இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைன் தலைநகரான கிவ்வில் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவ்வாறு தஞ்சமடைந்திருந்த 23 வயதான பெண் ஒருவருக்கு அங்கேயே போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் குழந்தை பிறந்துள்ளது.
நேற்று பிரசவ வலியில் துடித்த அந்த பெண் அலறல் சத்தம் கேட்டு காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. காவலர்கள் அந்த பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தைக்கு மியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், 'பூமிக்கு அடியில், எரியும் கட்டிடங்கள் மற்றும் ரஷிய டாங்கிகளுக்கு அடுத்ததாக... தங்குமிடங்களில் ஒன்றில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவளை சுதந்திரம் என்று அழைப்போம்! உக்ரைனை நம்புங்கள்' என்று பதிவிட்டுள்ளது.