

டாக்கா,
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும்போது அந்த பயணமானது அவருக்கு நினைவில் நிற்கும் வகையில் இருக்கவேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே கடந்த சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த கடந்த கால வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்து அடுத்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும். இந்திய - வங்கதேச உறவை வலுப்படுத்த பரஸ்பர நம்பிக்கை தேவை. வணிகம் மற்றும் மக்கள் தொடர்பு மூலம் நாம் வலிமைபடுத்திக்கொள்ள வேண்டும். வங்கதேச மக்களுக்கு தேவையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகள் பெருக்க இந்தியா முழு ஒத்துழைப்பு தர விரும்புகிறது” என்றார்.
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அவர் வருவது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ள நிலையில், அவரது இந்திய பயணம் “நினைவில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக இந்திய தூதர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். மேலும், தாரிக் ரஹ்மான் இந்தியா வரும்போது அவருக்கு உரிய மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மோடி உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நீடித்து வருகிறது.